ஜோதிட சூட்சுமங்கள் : (ஜோதிட பாடம் : 011 )

ஒரு கிரகம் - சில வீடுகளில் இருக்கும்போது  - பலமாகவும், சில வீடுகளில் பலவீனமாகவும் இருக்கும் . இது உங்களுக்கு தெரிஞ்ச விஷயம் .. இல்லையா?

ஒரு கிரகத்திற்கு - குறிப்பிட்ட சில ஸ்தானங்களில் , மற்றொரு கிரகம் அமரும்போது - அது அற்புத பலன்கள் தரும் யோகமாகி விடுகிறது. உதாரணத்துக்கு - மெட்ராஸ் மாதிரி ஊர்லே வந்து இருக்கிறீங்க னு வைச்சுப்போம்.  உங்க சொந்த ஊர்லே இருந்து , ரொம்ப தெரிஞ்சவங்க - நாலு வீடு தள்ளி இருக்கிறாங்கனு வைச்சுக்கோங்க. என்ன இருந்தாலும், அது ஒரு சப்போர்ட்.. தானே. அதுவே உங்க சொந்த மாமா, மாமனார் னு இருந்தா.. கூடுதல் பலம்.. இல்லையா..?  சில சமயம் அதுவே, சிலருக்கு தொல்லையாவும் இருக்கலாம்.. கரெக்டா?  அதே தான். 

 அதே மாதிரி தான் - யோகங்களிலும் - சுப யோகம் , அவ யோகம் னு உண்டு.
அதாவது - சில யோகங்கள் நல்லதும் செய்யும். சில கெட்டதும் செய்யும். 
சில முக்கியமான யோகங்கள், அதனாலே ஏற்படக்கூடிய பலன்களும் பார்க்கலாம். 
யோகங்கள் : 

ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கையாலும், ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தின் சம்மந்தம் பெறுவதாலும், ஒரு கிரகம் குறிப்பிட்ட ஸ்தானத்தில் ஆட்சி, உச்சம் போன்ற நிலைகளில் இருந்தாலும் ஏற்படக்கூடிய விளைவுகள் யோகம் எனப்படும். 

யோகம் என்றவுடன் அதிர்ஷ்டமான  அமைப்பு என்று கருதினால் அது தவறாகும். ஜோதிட பரிபாஷையில் யோகங்கள் என்ற வார்த்தை ஒரு கிரகத்திற்கும் இன்னொரு கிரகத்திற்கும் தொடர்பை குறிக்கும் குறியிட்டு வார்த்தை தான். இந்த வார்த்தை தனித்தனி கிரகங்களோடு சம்பந்தப்படும் போது பலவித அர்த்தங்களைத் தருகிறது.

3600 யோகங்கள் இருப்பதாக பழைய மூல நூல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் சுமார் 400 யோகங்கள் மட்டுமே அதிகம் நடைமுறையில் அலசி ஆராயப்படுகிறது.. .


பஞ்ச மஹா புருஷ யோகம்.
இந்த யோகம் பஞ்ச மஹாபுருஷர்களால் ஏற்படக்கூடியது. நவகிரகங்களில் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இவ்வைந்து கிரகங்களுக்கும் பஞ்ச மஹாபுருஷர்கள் என்று பொதுவாக ஒரு பெயர் உண்டு. 
1) செவ்வாயால் ஏற்படக்கூடிய ருசக யோகம்.
2) புதனால் ஏற்படக்கூடிய பத்ராயோகம்.
3) குருவால் ஏற்படக்கூடிய ஹம்ச யோகம்
4) சுக்கிரனால் ஏற்படக்கூடிய மாளவியா யோகம்
5) சனியால் ஏற்படக்கூடிய சச யோகம்

 நீசம் அடையாமல் , மேலே கூறிய கிரகங்கள் - இலக்கின கேந்திரத்தில் - நின்றாலோ, அல்லது தனது சொந்த வீடுகளில் ஆட்சி பெற்றாலோ , அல்லது உச்ச வீடுகளில் இருந்தாலோ - இந்த பஞ்ச மகா யோகங்களில் ஒன்று ஏற்படுகிறது. அதனால் என்ன பலன்..? அந்த கிரகங்களோட காரகத்துவம் பாருங்க.. 

உதாரணத்துக்கு - பத்ரா யோகம். புதன் - கேந்திரத்திலோ - இல்லை கன்னி , மிதுனத்திலோ இருந்தால் வரும். இந்த ஜாதகர்கள் - புத்தி சாலி, அறிவு ஜீவி.. பள்ளி படிப்பு கொஞ்சமா இருந்தாக் கூட - எதாவது ஒரு துறையில் , தானே முயன்று - கற்று - அந்த துறையில் நல்ல தேர்ச்சி பெற்று விடுகிறார்கள்.
அனுபவத்தில் - புதன் உச்சமாக , ஆட்சியாக இருப்பவர்கள் :- நகைச்சுவை உணர்வு அதிகமாக இருக்கும். காதலுக்கு தூது போவார்கள்.., காதலிக்கும்  நண்பர்களை சேர்த்து வைப்பதில் - ஆர்வம் இருக்கும். அதனால் பிரச்னை வரும். சுயமாக சிந்திக்கும் தன்மை கொஞ்சம் கம்மி தான். ஆனால் - 'கெத்து' மெய்ண்டைன் பண்ணுவாங்க. இப்படி......
மத்த யோகங்களுக்கும் - இதே மாதிரி - எடுத்துக்கொள்ளவும்.

சந்திரன் சம்பந்தப்பட்ட யோகங்கள்:

 சந்திரனோடு மற்ற கிரகங்கள் சம்பந்தப்படும் போது ஏற்படும் யோகங்களைக் கவனிப்போம்.  ஒரு ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்னும் பின்னும் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அது துருதரா யோகம் எனப்படும்.  இந்த யோகம் ஜாதகனுக்கு நல்ல உறவையும் நல்ல குணத்தையும் வாகன சுகத்தையும் கொடுக்கும்.

  அதேபோல சந்தினுக்கு 12வது இடத்தில் ராகு கேதுக்களைத் தவிர வேறு கிரகங்கள் இருந்தால்  அனபாயோகம் எனப்படும்.  இந்த யோகம் ஆரோக்கியத்தையும், பெயர் புகழையும் தரும்.

  சந்திரனுக்கு 2ம் இடத்தில் சூரியன், ராகு, கேதுக்களைத் தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அது சுனபா யோகம் எனப்படும்.  இந்த யோகம் சாதாரண மனிதனை உழைப்பின் மூலமாக உயர்த்தி அரசனுக்குச் சமமாக ஆக்கிவிடும்.

 சந்திரனுக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் எதுவும் இல்லாது அது கேமத்துருமம் என்னும் யோகமாகும்.  இந்த யோகம் ஒரு ஜாதகத்தில் இருந்தால். இது எவ்வளவு பெரிய செல்வந்தர்களையும், அவர் இறப்பதற்கு முன் ஆண்டியாக்கி - வீதியில் நிற்க வைத்து விடும். இது பொது விதி. இதற்க்கு நிறைய விஷயங்களை சரி பார்க்க வேண்டும். அவசரப் பட்டு உடனே பலன் சொல்லி விடாதீர்கள்.

 சந்திரனுக்கு 1, 4, 7, 10 ஆகிய ஸ்தானங்களில் குரு இருந்தால் அது கஜ கேசரி  யோகமாகும்.  இந்த யோகம் தீர்க்காயுளையும், புகழையும், பண வருவாயையும், வாகன சுகத்தையும் கொடுக்கும். 
இது வந்து ரொம்ப அபூர்வம், அப்படி இப்படினு நெறைய பேர் காதுலே பூ சுத்தி இருப்பாங்க.. நம்பாதீங்க. மாசத்துலே , குறைஞ்சது - பத்து நாள் , சந்திரனும் - குருவும் - இந்த நிலைலே தான் இருப்பாங்க. 
ஆனால் - இது ஒரு நல்ல யோகம். அதுலே சந்தேகம் இல்லை. எவ்வளவு கஷ்டப்படுற குடும்பத்திலே இந்த ஜாதகர் பிறந்தாலும், அந்த தரித்திர சூழ்நிலையிலிருந்து அந்த குடும்பத்தை மீட்டுக் கொண்டு வரும் ஆற்றல் - அந்த ஜாதகருக்கு ஏற்படுகிறது.
சந்திரனும், குருவும்  - லக்கினத்தில் இருந்து மறையாமல் இருந்தால் - இது கண்டிப்பாக - மிக சிறந்த யோகமாகும். ஜோதிடப்படி மிகச்சிறந்த யோகம் கஜகேசரி யோகமாகும்.

 ஜாதகத்தில் சந்திரனும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் அது சந்திர மங்கள யோகமாகும்.  இந்த யோகம் அசையாத சொத்துக்களை அதிகமாகத் தரும்.  அதேநேரம் இக்கிரகங்களை அசுப கிரகம் ஏதாவது ஒன்று பார்த்தால் ஜாதகனுக்குச் சொத்துக்களைக் கொடுத்து மூளைக் கோளாறைத் தந்து விடுகிறது.

 சந்திரனுக்கு 8, (அ) 12ல் குரு இருந்தால் அது சகடயோகமாகும்.  இந்த யோகத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை நிலையில்லாமல் சக்கரம் போல் மேலும் கீழும் சுற்றிக் கொண்டே இருக்கும். நல்ல நிலைலே இருக்கிறவங்க - சர்ர் ருனு கீழே வந்து, திரும்ப மேல வருவாங்க..


 சூரியன் சம்பந்தப்பட்ட யோகங்கள்:

  சூரியனுக்கு 2ல் சந்திரன், ராகு, கேது, தவிர, வேறு கிரகங்கள் இருந்தால் அது வேசி யோகம் எனப்படும்.  இந்த யோகத்தோடு பிறந்த ஆண் ஆனாலும் பெண் ஆனாலும் சுய கௌரவத்தை இழந்து பணம் மற்றும் சொத்துக்களைப் பெறுவார்கள்.

  சூரியனுக்கு 12ல் ராகு, கேதுக்களைத் தவிர மற்ற கிரகங்கள் இருந்தால் அது வாசியோகமாகும்.  இந்த யோகம் பெரும் புகழை ஜாதகன் பெறும்படிச் செய்யும்.  சூரியன் இருக்கும் ராசிக்கு இரு பக்கங்களிலும் எந்தக் கிரகம் இருந்தாலும் அது சுய உபயசாரி யோகம் எனப்படும்.  இது நல்ல வருவாயையும புகழையும் ஈட்டித்தரும்.

புத ஆதித்யா யோகம்
புதனும், சூரியனும் ஒரு ராசியில் சேர்ந்திருந்தால் அது யோகத்தைக் கொடுக்கும். அந்த யோகத்தின் பெயர் புத ஆதித்ய யோகம் .
 இந்த யோகம் அதீத திறமைகளைக் கொடுக்கும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும். சமூகத்தில்/நட்பு வட்டாரங்களில் மதிப்பையும், மரியாதையையும் கொடுக்கும். நிபுணத்துவ யோகம் . உயர் கல்வி கற்கும் சூழ்நிலை ஏற்படும். அவசரப் படாதீங்க. நூத்துக்கு எண்பது பேருக்கு - சூரியனும், புதனும் சேர்ந்து தான் இருக்கும். இரண்டில் ஒன்று - ஆட்சி , உச்சம் இருக்க வேண்டும். அல்லது - கேந்திர, கோணங்களில் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் மறைவு ஸ்தானங்களில் இல்லாமல்  இருக்க வேண்டும். தீய கிரக சேர்க்கை , பார்வை இருக்க கூடாது. 

இதே போலே - பல யோகங்கள் இருக்கின்றன . ஜாதகம் பார்க்கும் பொழுது - இந்த யோகங்கள் இருக்கிறதேயானால் - உரிய தசா, புத்தி காலங்களில் - அந்த ஜாதகருக்கு - உரிய பலன்கள் ஏற்படுகிறது..