ஜோதிட சூட்சுமங்கள் : (ஜோதிட பாடம் 10 )

 அம்சம்ங்கிறது நவாம்சம் . நிறைய ஜோதிடர்கள் ராசி மட்டும் வைச்சு , பார்த்து பலன் சொல்றாங்க. அது அவ்வளவு துல்லியமா வராது. ஏன்னா , கிரகங்களோட உண்மையான வலிமையை பார்க்கிறதுக்கு - அம்ச கட்டத்தையும் பார்க்கணும்.

ராசிக் கட்டத்தை, இன்னும் கொஞ்சம் லென்சை வைச்சு , துல்லியமா பார்த்து குறிக்கிறது அம்சக் கட்டம். லக்கினத்தின் உள் விரிவாக்கம் னு எடுத்துக்கிடலாம். திருமண வாழ்க்கை பார்க்கிறதுக்கு - அம்சம் அவசியம் தேவை. 

ராசியை மேலோட்டமா பார்த்தா - ஒரு கிரகம் நல்ல நிலைமைலே இருக்கிற மாதிரி தெரியலாம். ஆனால், அம்சத்திலே அந்த கிரகம் வலிமை இல்லாமல் இருந்தால், பலன் முழுவதுமா கிடைக்கிறதில்லை.


நவாம்சம் என்பது ராசியின் 1/9தாவது பகுதி. அதுக்குத்தான், லென்சை வைச்சுப் பார்க்கிற மாதிரின்னு சொன்னேன்.

ராசிச் சக்கரம்தான் பிரதானமானது. நவாம்சச் சக்கரம் உபரியானது. டாக்டர்  நம்மை சட்டையோடும் பரிசோதனை செய்வார். சட்டையைக் கழற்றிவிட்டும் பரிசோதனை செய்வார். அதுபோல ஜாதகத்தை சட்டையோடு பரிசோதனை செய்வதற்கு ராசிச் சக்கரம். ஜாதகத்தின் சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்வதற்கு நவாம்சச் சக்கரம். 

சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்யும்போது பல விஷயங்கள் எளிதில் புலப்படும். ஆனால், அதற்காக ஒவ்வொரு முறையும் சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்வது விவகாரமாக இருக்கும். ஆகவே எப்போது சட்டையோடு பரிசோதனை செய்ய வேண்டும், எப்போது சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை ஜோதிடர்கள் புரிந்துகொண்டு செயல் படுத்த வேண்டும்.


அதனாலே, நம்மோட வாசகர்கள் - ஜோதிட பாடம் பயில்றவங்க , அம்சத்தையும் சேர்த்துப் பார்த்து பலன் சொல்வது நல்லதுங்கிறது என்னோட அபிப்பிராயம்.

சரி, இப்போ பாடம் பார்க்கலாம். 


வர்கோத்தம யோகம் என்றால் என்ன? 

ஒருவர் ஜாதகத்தில் குறிப்பிட்ட ஒரு கிரகம் அவர்களது ராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருந்தால் அதனை வர்கோத்தமம் அல்லது வர்கோத்தம யோகம் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

உதாரணமாக ஒருவரது ஜனன (ராசி) ஜாதகத்தில், குரு சிம்மத்தில்  அமர்ந்துள்ளார் என்றால், அவரது நவாம்சத்திலும் குரு சிம்மத்தில்  அமர்ந்திருந்தால் வர்கோத்தமம் என்று கொள்ளலாம்.

ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி/உச்சம் பெற்ற கிரகங்களை போலேவே  வர்கோத்தமம் பெற்ற கிரகம் பல ராஜ யோகங்களைத் தர வல்லது. ஒருவருக்கு 2 அல்லது 3 கிரகங்கள் வர்கோத்தமம் பெற்றிருந்தால் அவருக்கு அதிக அளவிலான ராஜயோகம் கிடைக்கும்.

அதேவேளையில் எந்த கிரகம் வர்கோத்தமம் பெற்றுள்ளது என்பதையும் பார்க்க வேண்டும். லக்கினாதிபதி (1 ) , பாக்கியாதிபதி (9 ) , ஜீவனாதிபதி (10 ), சுகாதிபதி (4 ) ஆகிய கிரகங்கள் வர்கோத்தமம் அடைந்தால் ஆயுள் முழுவதும் சிறப்பான பலன்களை அந்த ஜாதகர் அனுபவிப்பார்.

ஒரு சில பாவ கிரகங்கள் வர்கோத்தமம் பெற்றாலும் அவை சுபத்தன்மை அடைந்து, சிறப்பான பலன்களைத் தரும் என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை. 

இன்னும் ஒரு சிலருக்கு, ராசிக் கட்டத்தில் - லக்கினத்தில் எந்த கிரகமும் இல்லை என்றாலோ, அல்லது - எந்த கிரகமும், உச்சம், நீசம் ஆட்சி அமைப்பில் இல்லை என்றாலோ, அம்சம் பார்த்து பலன் சொல்வது - மிக முக்கியம். 

பாவ கத்திரி  யோகம் 
 இரண்டு கத்திகளை ஒன்று சேர்த்தால் அது கத்திரிக்கோல் ஆகிவிடும்.
பாப  கத்திரி யோகம் என்பது, கத்தரிக்குள் மாட்டிக்கொண்ட
யோகம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கத்திரிக்குள் மாட்டிக் கொண்டால் என்ன ஆகும்?  வெட்டுப்பட்டுப் போகும். இல்லையா?

வெட்டுப்படுதலில் தீயதும் நடக்கும். நல்லதும் நடக்கும்.  துணி இருக்குனு வைச்சுப்போம், வெட்டுனாதனே சட்டை தைக்க முடியும். நல்லதும் நடக்க முடியும். ஆனால்,   இந்த யோகத்தில், அதிகமாகத் தீமையே உண்டு.  சில நேரங்களில், சில அமைப்புக்களால் நன்மையும் உண்டு. நடுவில் மாட்டிக்கொண்ட வீட்டின் பலன்கள் கெடும் அல்லது  பலன்கள் அநியாயத்திற்குத் தாமதமாகும்.

இதை எப்படி பார்க்கிறது ?

இரண்டு தீய கிரகங்கள் ஒரு வீட்டின் இரு பக்கமும் அல்லது
ஒருகிரகத்தின் இருபக்கமும் அமர்ந்திருந்தால் அது பாபகர்த்தாரி
யோகம் எனப்படும்!

உதாரணத்திற்கு, 7ஆம் வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள்
இருந்தால், ஜாதகனின் திருமணம், தள்ளிக்
கொண்டே போகும். ஜாதகத்தில் வேறு நல்ல அமைப்புக்கள்
இல்லாமலிருந்தால், திருமணமே நடக்காமல் போய்விடும் அபாயமும்
உண்டு. அப்படியே திருமணம் ஆகியிருந்தாலும், திருமண வாழ்க்கை
மகிழ்ச்சியில்லாமல் இருக்கும்.

இதே அமைப்பு 10ஆம் வீட்டிற்கு ஏற்பட்டாலும், அதாவது பத்தாம்
வீட்டின் இரு புறமும் தீய கிரகங்கள் இருந்தாலும், ஜாதகனுக்கு
வேலை கிடைக்காது. கிடைத்தாலும் திருப்தியிருக்காது. அவதியாக
இருக்கும். தனியாக தொழில் செய்வதும் நல்லதல்ல.

இந்த அமைப்பு ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், அப்படியே
அந்த வீட்டிற்கான பலாபலன்கள் கெடும். அவை என்னவென்று
சம்பந்தப்பட்ட அந்த வீட்டை வைத்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

4 என்றால் கல்வி, 5 என்றால் குழந்தைபாக்கியம் இப்படி.....!

இதே அமைப்பில் சிலருக்கு நன்மையும் கிடைக்கக்கூடும்!

அது என்ன?

ஒரு வீட்டின் இருபுறமும் அல்லது ஒரு கிரகத்தின் இருபுறமும்
சுபக் கிரகங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட அந்த வீட்டிற்கு
நன்மையான பலன்கள் அபரிதமாகக் கிடைக்கும்.

தீமைகளைச் செய்யக்கூடிய கிரகங்கள்:
சனி, செவ்வாய், ராகு, கேது & சூரியன்

நன்மைகளைச் செய்யக்கூடிய கிரகங்கள்:
குரு,  வளர் பிறை  சந்திரன், சுக்கிரன் & புதன்

உதாரணங்கள்:

துலாமில் சுக்கிரன். அதன் பின்னால் கன்னியில்  சனி,
அதற்கு முன்னால் விருச்சிகத்தில் சூரியன் இருப்பதாக வைத்துக்
கொள்ளுங்கள். அது துலாம் வீட்டிற்குப் பாப கர்த்தாரி யோகத்தைக்
கொடுக்கும். கொடுத்தால் என்ன ஆகும்? சுக்கிரனால் சரிவர
இயங்க முடியாது. ஜாதகனுக்கு உரிய பலனைத் தரமுடியாது.

ஜாதகன் காசு இருந்தும் பட்டினி, கல்யாணம் பண்ணியும்
பிரம்மச்சாரியாக இருப்பான். சுகங்களை அனுபவிக்க முடியாது.


இதைப்போல ஐந்தாம் வீட்டின் இருபுறமும் இரு தீய கிரகங்கள்.
ஐந்தாம் வீட்டில் எந்தகிரகமும் இல்லை என்று வைத்துக்
கொள்ளுங்கள். இந்த அமைப்பு ஜாதகனின் குழந்தைகளைப்
பாதிக்கும். அதாவது ஜாதகன் தன்னுடைய குழந்தைகளால்
அவதிப் படுவான் அல்லது குழந்தை இல்லாமல் அவதிப்படுவான்


இரண்டு தீய கிரகங்களுக்கு இடையில் லக்கினம் மாட்டிக்கொண்டு
விட்டால், ஜாதகன் குணக்கேடு உடையவனாக இருப்பான். அதனால்
பல சிக்கல்களை அவன் எதிர்கொள்ள நேரிடும்.

அப்புறம், நம்ம இணைய வாசக அன்பர்கள் அனைவருக்கும் இன்னொரு முக்கியமான விஷயம். ஜோதிட பாடம் படிக்கிறது ரொம்ப ஈசி. அந்த மாதிரி , புரிகிற அளவுக்கு - நடத்த முடியும் ங்கிற நம்பிக்கை , எனக்கு கொஞ்சம் இருக்கு. ஆனால் நீங்க மத்தவங்களுக்கு பார்த்து பலன் சொல்லும் முன்பு - நீங்க ரொம்ப தெளிவா சொல்லணும். குழப்பவாதியா இருக்கக் கூடாது.

உங்களுடைய ஒழுக்கம் முக்கியம். தினமும், கறி , மீன் சாப்பிட்டுக் கிட்டு - சரக்கு அடிச்சுக்கிட்டு , கெட்ட பெண்களோட சகவாசம் வைச்சுக்கிட்டு - ரொம்ப பக்காவான மாடர்ன் ஜமீன்தார் ரேஞ்சுக்கு இருந்தா - பலன் தப்பா போறதுக்கு வாய்ப்பு இருக்கு. ரொம்ப கவனமா இருங்க. ஏன்னா  , கஷ்ட்டத்திலே தவிக்கிற ஒருத்தருக்கு - உங்களோட வார்த்தைகள் ஒரு ஆறுதலாவும், வழிகாட்டியாகவும், பலம் கொடுப்பதாகவும் இருக்கணும்...

ஏதாவது கெட்ட பலன் வரப்போற மாதிரி இருந்தால் கூட - உடனே உங்க வாயிலே இருந்து அந்த வார்த்தைகள் வந்து விடக் கூடாது. வார்த்தைப் பிரயோகம் ரொம்ப கவனமா இருந்தே ஆகணும். குரு ஸ்தானத்திலே இருக்கிற ஒருத்தரோட வாய் முகூர்த்தம் - கெட்ட விஷயங்களில் சீக்கிரமே பலித்து விடுகிறது.

என்னுடைய அனுபவத்திலே இன்னொரு முக்கிய விஷயம் - தினமும் , இறை ஆலயங்களுக்கு செல்ல முடிந்தால் - அது உங்களுக்கு அற்புத பலன்கள் தரும். வாக்கு பலிதம் ஏற்படும்.  எனக்கு ரொம்பவும் தெரிந்த நண்பர் ஒருவர் - புதிதாக  வீடு வாங்கினார்.  வாஸ்துப் படி அந்த வீட்டில் துர் மரணம் ஏற்பட வாய்ப்பு. தினமும்  நாள் தவறாமல் பத்து வருடங்கள் , அருகில் உள்ள சிவ ஆலய வழிபாடு செய்து , (இது அவருக்கு தெரியாமலே நடந்தது ), அவரை அந்த இறைவனின் அருள் காப்பற்றி வந்தது. அவரது ஜாதகப் படி நல்ல நேரம் தான். இருந்தும் - அவர் தங்கி இருந்த வீட்டு நிலைமை , படு மோசமான நிலைமை.


பிறகு அந்த நண்பருக்கு  நாம் ஆலோசனை சொல்லிய வுடன், அந்த வீட்டை வேறு ஒருவருக்கு விற்று - அவர்கள் அந்த வீட்டை  மொத்தமாக மாற்றி - ஷாப்பிங்  காம்ப்ளெக்ஸ் கட்டி விட்டார்கள்.

அதனால் உங்களுக்கு  அடிப்படை வாஸ்து அறிவும், கை  ரேகை அறிவும் கொஞ்சம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தங்கி இருக்கிற வீடு தானே , ஜடப் பொருள் தானே என்று எண்ணி விடாதீர்கள். பஞ்ச பூதங்களும், நவ கிரகங்களும் - நாம் தங்கி இருக்கும் வீட்டில் வாசம் செய்கின்றன. மனித உடம்பு அழிந்து விடும். நிலம் பல கால மாற்றங்களை தாண்டி நிற்கும். நிலம் ஜடப் பொருள் கிடையாது. எத்தனை தாவரங்கள் வளர்கின்றன. பாருங்கள்.  எத்தனை மலர்கள்.. தென்னை மரங்கள், வாழை மரங்கள், நெல் வயல்கள்... அதனால் எத்தனை ஜீவராசிகளுக்கு வாழ்வாதாரம். ....

நீங்கள் தங்கி இருக்கும் வீட்டில் - நிலம் உள்ளது. நீர் இருக்கும், அக்னி இருக்கும், காற்று இருக்கும், மேற் கூரையே  ஆகாயம் ... பஞ்ச பூதங்களும் உள்ளன. உங்கள் வீட்டை , ஒரு ஆலயம் போல் வைத்துக் கொள்ளுங்கள்.  அது உங்கள் மனதில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தி  , உங்கள் வாழ்வில் வசந்தம் ஏற்பட வழி செய்யும்.

நான் சொல்ல வந்த விஷயம் - தினமும் - இறை வழிபாடு. ஆலயம் சென்று வந்தால் - மிக நல்லது. அந்த ஈசனின் அருள் , உங்களை கவசம் போல் காக்கும். உங்களையும் , உங்கள் சந்ததியையும்  .

வேலை விஷயமாக வெளியூர் சென்றாலும், அருகில் உள்ள ஆலயம் செல்லும் வழக்கத்தை கொள்ளுங்கள்.